கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மாற்றுத்திறனாளி பெண் தர்ணா
இலவச பசுமை வீடு வழங்க, தம்மை அலைக்கழிக்க வைப்பதாகக்கூறி, கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே, கண்ணீருடன் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.;
தர்ணாவில் ஈடுபட்ட தேன்மொழியுடன் பேச்சு நடத்திய சமாதானம் செய்த போலீசார்.
வறுமையில் வாழும் வீடற்ற மக்களுக்கு சூரிய மின்சக்தியுடன் கூடிய விளக்குகள் அமைத்து, முதலமைச்சரின் பசுமை வீடு வழங்கப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த டெய்லரிங் ஆசிரியராக உள்ள தேன்மொழி என்ற மாற்று திறனாளிப் பெண், பசுமை வீட்டிற்கு விண்ணப்பம் செய்துள்ளார்.
தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து 5முறை மனுவும் அளித்துள்ளார். பசுமை வீட்டை வழங்குவதாக உறுதியளித்து பல முறை திருப்பி அனுப்பிவிடுவதாகவும், இதுவரை தனக்கு இலவச பசுமை வீடு கிடைக்கப்படவில்லை எனவும், தன்னை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அலைக்கழிக்கப்படுவதாகவும் கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமர்ந்து கண்ணீர் மல்க தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அங்கு வந்த போலீசார் மற்றும் மாற்றுத்திறனாளி அலுவலர், தேன்மொழியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீடு பெற்று தருவதாக உறுதியளித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர். இதனால், அங்கு சற்று பரபரப்பு நிலவியது.