பெரியார் பல்கலை., தேர்வில் தாழ்த்தப்பட்ட ஜாதி எவை என கேள்வி: பாஜகவினர் கண்டனம்

பெரியார் பல்கலைக்கழக தேர்வில் தாழ்த்தப்பட்ட ஜாதிகள் எவை? என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு பாஜகவினர் கண்டனம்.

Update: 2022-07-18 12:00 GMT

பாஜக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜூலை 14ம் தேதி வரலாற்று முதுகலை பட்டப்படிப்பு பாடத்திற்கான முதலாம் ஆண்டு இரண்டாவது செமஸ்டர் தேர்வில் " தமிழ்நாட்டிற்குரிய தாழ்ந்த ஜாதிகள் எவை" என வினா கேட்கப்பட்டு "மஹர், நாடார், ஈழவர், ஹரிஜன் என்ற நான்கு ஜாதிகளின் பெயர்கள் விருப்ப பதிலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமன் ராமசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவை மாவட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் விவேக் முன்னிலை வகித்தார்.

இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு பெரியார் பல்கலைக்கழகத்தின் அந்த வினாவை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் விவேக், சமூக நீதி என பேசி வரும் திமுக அரசு இதுபோன்ற சமூக நீதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News