வீடு புகுந்து கொள்ளையடிப்பதை தடுக்க புதிய செயலி: மாவட்ட காவல்துறை அறிமுகம்

'சகோ' என்ற செயலி மூலம் வெளியூர் செல்லும் பொதுமக்கள் தங்கள் வீட்டின் முகவரி, பெயர், புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Update: 2021-10-22 17:00 GMT

சகோ செயலியை அறிமுகம் செய்த எஸ்.பி.செல்வநாகரத்தினம்.

கோவை மாவட்ட காவல் துறை சார்பில் வீட்டை உடைத்து நடைபெறும் கொள்ளையை தடுக்கும் விதமாக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியின் அறிமுக விழா கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, (Safe Kovai ) 'சகோ' என்ற செயலி மூலம் வெளியூர் செல்லும் பெதுமக்கள் தங்கள் வீட்டின் முகவரி, பெயர், புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த பதிவுகள் உடனடியாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு, சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆப் மூலமே தகவல் அனுப்பப்படுகிறது. மேலும் இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு டேப் வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப் மூலம் பதிவு செய்யப்பட்ட வீட்டின் முகவரிக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் போலிசார் ரோந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது வரை பூட்டிய வீடுகள் குறித்த தகவல்கள் போலிசார் ரோந்து செல்லும் போது மட்டுமே கண்டறியப்படும்.

ஒரு நாளைக்கு மாவட்டம் முழுவதும் 100 முதல் 120 வீடுகள் மட்டுமே கண்டறிய முடிந்தது. இந்த செயலி மூலம் பதிவு செய்தால் கூடுதலாக பூட்டிய வீடுகளை கண்டறிந்து பாதுகாப்பு வழங்க முடியும். பொதுமக்கள் இந்த செயலி பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதே போல் கட்டண அடிப்படையில் வெளியூர் செல்லும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவைப்பட்டால் சிசிடிவி மற்றும் சென்சார்கள் கருவிகளை பொருத்தவும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

Tags:    

Similar News