எச்.ராஜாவை கைது செய்யக் கோரி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்

எச்.ராஜா இஸ்லாமியர்களுக்கு எதிராக மதம் மோதலை உருவாக்கும் எண்ணத்தோடு பேசுவதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2021-12-23 11:15 GMT

திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்.

கோவையில் நேற்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 17ஆம் தேதி பாரதியார் பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேராசிரியர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டார். இந்த நிலையில் இக்கூட்டத்திற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு பாஜக மூத்த தலைவர் எச் .ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் எச் ராஜா இஸ்லாமியர்களுக்கு எதிராக மதம் மோதலை உருவாக்கும் எண்ணத்தோடு பேசியதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் குறித்தும் சுப வீரபாண்டியன் குறித்து அவதூறாக பேசிய எச் ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இந்த நிகழ்வில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News