கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் துவங்கியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Update: 2021-12-06 07:30 GMT

தீப்பற்றி எரிந்த கார்.

கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சப்பன் (75). கோவை நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஓய்வூதியம் தொடர்பாக விசாரிக்க வந்துவிட்டு மீண்டும் வெளியே வந்த போது மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அவரது காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் காரில் இருந்த நஞ்சப்பன் மற்றும் அவருடன் வந்தவரும் உடனடியாக காரை நிறுத்தி விட்டு வெளியேறினர். இதனிடையே கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் துவங்கியது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் அதற்குள் காரின் பெரும்பகுதி முழுமையாக எரிந்து நாசமானது. காரின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுவதால் இன்று அதிகளவு மக்கள் வந்திருந்த நிலையில் கார் தீபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பந்தயசாலை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் போக்குவரத்தை சீர்படுத்தினர்.

Tags:    

Similar News