அரசு வங்கிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

இன்றும், நாளையும் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

Update: 2021-12-16 09:45 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள்.

மத்திய அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதனை கண்டித்து அரசு வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றும், நாளையும் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதன்படி இன்று கோவையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் மத்திய அரசின் இந்த கொள்கை முடிவை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

9 தொழிற்சங்க அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இதில் கலந்து கொண்ட ஊழியர்கள் மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து பேட்டியளித்த கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்க உதவி தலைவர் ராஜன், மத்திய அரசு எந்த ஆலோசனையும் மேற்கொள்ளாமல் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை குறைப்பதற்காக இந்த அரசாங்கம் முயன்று வருவதாக குற்றம் சாட்டினார்.

தற்போது சர்வாதிகார அரசாக இந்த அரசாங்கம் உள்ளதாகவும் விமர்சித்தார். நிர்மலா சீதாராமன் இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று கூறிய நிலையில் அதனை ரகசியமாக வைத்துள்ளதாக தெரிவித்த அவர் அதனை கண்டித்து தான் முக்கியமாக இந்த இரண்டு நாள் போராட்டம் நடத்தப்படுவதாக கூறினார். இதன் மூலம் 8000 கோடி இழப்பு ஏற்படும் என்றும் கோவையை பொருத்தவரை 300 கோடி இழப்பு ஏற்பட கூடும் என்றும் தெரிவித்த அவர் கோவையில் 5000 ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News