பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் கோரிக்கை..!

பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் கோரிக்கை..!

மோசமாக உடைந்து கிடைக்கும் சாலை 

கன்னிகைப்பேர் ஏரிக்கரை அருகே சென்னை-திருப்பதி சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க புதிய தார் சாலை அமைக்க வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியபாளையம் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள ராட்சத பள்ளம் காரணமாக சென்னை - திருப்பதி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். சாலையை முறையாக பராமரிப்பதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே சென்னை - திருப்பதி சாலை உள்ளது, சென்னையில் இருந்து ஆந்திரா வழியே வடமாநிலங்களுக்கும், வடமாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியே சென்னைக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் ஏரிக்கரை அருகே சமீபத்தில் பெய்த புயல் காரணமாக கன்னிகைப் பேர் ஏரி நிரம்பி சாலையில் மதகு வழியாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காரணத்தினால் தார் சாலை சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு பல்வேறு இடங்களில் அடித்து செல்லப்பட்டு பெரிய அளவில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டது.

தண்ணீர் குறைந்த பின்னர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆங்காங்கு சாலைகளை சீர் செய்தும் சரியான முறையில் சாலையை சீர் செய்யாத காரணத்தினால் இரவு நேரங்களில் அவ்வழியாக சென்று வரும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படாத வகையில் வாகனங்களை ஓரமாக செல்கின்றன.

இருவழி சாலையில் சாலையின் ஓரத்தில் மட்டுமே வாகனங்கள் செல்வதால் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடுகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையின் எதிர் திசையில் வாகனங்கள் செல்வதால் ஆந்திரா செல்லும் திசையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையின் இரு புறங்களிலும் சுமார் 1 கிமீ தூரத்திற்கு சாலை பெரிய ராட்சச பள்ளங்கள் ஏற்பட்ட காரணத்தினால் சில நேரங்களில் ஒரே சாலையில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

காலை நேரத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்லும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகும் சூழல் ஏற்படுகிறது. சென்னை-திருப்பதி சாலையில் தற்காலிகமாக சீரமைத்த சாலையானது சமீபத்தில் பெய்த ஓரிரு நாட்களில் மழை காரணத்தினால் சாலையில் போடப்பட்ட தார் அடித்து செல்லப்பட்டது.

மழை ஓய்ந்து 1மாதமாகியும் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கத்தால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். சென்னை - திருப்பதி சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து பழைய சாலையை முற்றிலுமாக அகற்றி புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

Tags

Next Story