புழல் ஏரியில் 3000 கனஅடி தண்ணீர் திறப்பு..! வெள்ள அபாய எச்சரிக்கை..!

புழல் ஏரியில் 3000 கனஅடி தண்ணீர் திறப்பு..! வெள்ள அபாய எச்சரிக்கை..!

புழல் ஏரி நிரம்பி கடல் போல காட்சி தருகிறது.

மிக்ஜாம் புயலால் தொடர் மழை பெய்து புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் பாதுகாப்பது கருதி ஏரியில் இருந்து 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

புழல் ஏரி 88சதவீத கொள்ளளவை நெருங்கிய நிலையில் பாதுகாப்பு கருதி 3000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. மழையால் நீர்வரத்து அதிகரித்தால் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் ஏற்கனவே கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக நீர் நிரம்பி வந்தது. இந்நிலையில் அண்மையில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாவும் தற்போது மிக்ஜாம் புயல் காரணமாக புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

இன்று காலை நிலவரப்படி புழல் ஏரியில் 2998 மில்லியன் கனஅடி நீர் நிரம்பியுள்ளது. 21.2 அடி ஆழம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 20.20 அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 8000 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக 189 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தற்போது புழல் ஏரி 88% நீர் இருப்பை நெருங்கியதால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து வினாடிக்கு 3000கனஅடி திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியின் உபரிநீர் திறக்கும் இரண்டு மதகுகளில் வழியாக வெளியேற்றப்பட்டுள்ள உபரி நீர் சுமார் 13.5 கி.மீ. கால்வாய் வழியே எண்ணூர் கடலில் சென்று சேரவுள்ளது.

நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்டலைன், சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், வடபெரும்பாக்கம், வடகரை, மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்ல உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர் மழை காரணமாக ஏரிக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீரி திறப்பும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டும் புழல் ஏரியில் இருந்து நவம்பர் மாதத்தில் உபரிநீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story