குளிர்சாதன பெட்டியை திறந்தபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு..!

குளிர்சாதன பெட்டியை  திறந்தபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு..!

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு செய்திக்கான மாதிரி படம் 

பூந்தமல்லி அருகே குளிர்சாதன பெட்டியை திறந்தபோது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி அருகே வாணியன்சத்திரம் கிராமத்தில் குளிர்சாதன பெட்டி திறந்த போது மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட கன்னிகாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த வாணியன் சத்திரம் கிராமம்,அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தவர் வீரம்மாள்(வயது47). குடும்பத் தலைவியான இவர் நேற்று மதியம் சமைப்பதற்காக பொருட்களை எடுக்க தனது வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியை திறந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அலறித் துடித்து மயங்கி கீழே விழுந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே வீரம்மாள் இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து வீரம்மாளின் கணவர் சீனிவாசன் வெங்கல் காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் செய்தார். எனவே,போலீசார் வீரம்மாள் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story