அந்தியூர் வட்டார பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு..!
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டார பகுதிகளில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஸ்குமார் தலைமையில் வியாழக்கிழமை (இன்று) சோதனை நடைபெற்றது.
HIGHLIGHTS
அந்தியூர் வட்டார பகுதிகளில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஸ்குமார் தலைமையில் வியாழக்கிழமை (இன்று) சோதனை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவகத்தில் உணவருந்திய சிறுமி உயிரிழந்ததையடுத்து மாநிலம் முழுவதும் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் தீவிர ஆய்வு செய்து வருகின்றனா். இந்நிலையில், ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் தங்கவிக்னேஷ் உத்தரவின் பேரில், அந்தியூர் பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்தியூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார் தலைமையில், அந்தியூர் பகுதிகளில் இயங்கி வரும் உணவகங்கள் மற்றும் அசைவ உணவுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 15 உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கெட்டுப்போன மீன் 1 கிலோ, சமைக்கப்பட்ட அரிசி சாதம் 6 கிலோ, குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 10 புரோட்டாக்கள், கலர் பவுடர் 250 கிராம், பாலித்தீன் கவர் 1 கிலோ ஆகியவை கைப்பற்றி அழிக்கப்பட்டது. மேலும், மூன்று கடைகளுக்கு தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூபாய் ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டது.