பொள்ளாச்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

பொள்ளாச்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன்.

நான் வெற்றி பெற்றவுடன் பொள்ளாச்சி நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக மாற்றப்படும் என அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் கூறினார்

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக, திமுக, பாஜக என மூன்று கட்சியினர் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகராட்சி 27 வது வார்டு பகுதியில் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய கார்த்திகேயன் கூறுகையில், பொள்ளாச்சி 36 வார்டு கொண்ட பகுதியாகும். இங்கு அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் சாலை வசதி போன்றவை மேம்படுத்தப்படும். நான் வெற்றி பெற்றவுடன் பொள்ளாச்சி நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக மாற்றப்படும். மேலும் ஆளும் திமுக அரசு தமிழக மக்களை வஞ்சிக்கும் விதமாக சொத்து வரி, குடிநீர் வரி, மின்சார கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்ற பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு விலை ஏற்றம் செய்துள்ளது.

அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை 1000 ரூபாய் தருவதாக கூறி பொய்யான வாக்குறுதிகளை அள்ளித் தந்தது. தற்போது திமுக வெற்றி பெற்றால் பொதுமக்கள் பயன்படுத்தப்படும் கேஸ் ரூபாய் 500 க்கு தரப்படும் என கூறி திமுக ஏமாற்றுகிறது. பொது மக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்து பெற்றி பெறச் செய்தால் பொள்ளாச்சியில் உள்ள மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்தார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக வேட்பாளர் கார்த்திகேயனுக்கு வரவேற்கும் விதமாக பெண்கள் ஆராத்தி எடுத்து தங்களது வார்டுக்குள் அழைத்துச் சென்றனர்.

Tags

Next Story