மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் கத்தியுடன் அட்டகாசம் செய்த சிறுவன் கைது

மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் கத்தியுடன் அட்டகாசம் செய்த சிறுவன் கைது

கோவை மதுக்கரை காவல் நிலையம் (கோப்பு படம்).

கோவையில் இரு சக்கர வாகனத்தில் கையில் பட்டா கத்தியுடன் வட்டமடித்தோடு, சாலையில் கத்தியை காட்டிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் கற்பகம் கல்லூரி அருகே நேற்று மாலை இரண்டு இளைஞர்கள் குடி போதையில் இரு சக்கர வாகனத்தில் சுற்றி வந்தனர். இரவு 8 மணியளவில் அங்குள்ள சிக்னல்களில் வாகனங்கள் நின்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் கையில் பட்டா கத்தியுடன் வட்டமடித்தோடு, சாலையில் கத்தியை உரசியபடி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் அந்த காட்சிகள் வைரலானது. இதனைத்தொடர்ந்து கோவை மதுக்கரை காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த நிலையில், மது போதையில் பட்டா கத்தியுடன் அட்டகாசத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை இருகூர் அருகே மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரது இரு சக்கர வாகனம் மற்றும் பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர். தலைமறைவான மற்றொரு நபரை போலீஸார் தேடி வருகின்றனர். விசாரணையில் பிடிபட்ட சிறுவன் கற்பகம் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டவர், என்றும் நேற்று கல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்தவர் தனது நண்பரோடு பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவர் மீதும் கொலை மிரட்டல், தகாத வார்த்தையில் பேசுதல், ஆயுதம் வைத்திருத்தல், உட்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.

Tags

Next Story