குடியிருப்புக்குள் புகுந்து கோழியை வேட்டையாடிய சிறுத்தை

குடியிருப்புக்குள் புகுந்து கோழியை வேட்டையாடிய சிறுத்தை

கோழியை வேட்டையாடிய சிறுத்தை

சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்து கோழியை வேட்டையாடி விட்டு தப்பிச்சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள், காட்டு மாடுகள் ஆகியவை வனப்பகுதியை விட்டு வெளியேறி, உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளின் அருகில் சுற்றி திரிவது வாடிக்கையான ஒன்று.

அந்த வகையில் கடந்த சில மாதங்களாக கோவை திருவள்ளுவர் நகர் அருகே உள்ள கணுவாய் மலைப் பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகளவில் தென்பட்டு வருகிறது. இரவு வேலைகள் மட்டுமின்றி பகல் வேலைகளிலும் சிறுத்தைகள் அடிக்கடி சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியிருந்தனர். கோவை கணுவாய் அருகே உள்ள பழனியப்பா லேஅவுட் பகுதியில் சக்திவேல் என்பவர் தனது வீட்டில் சிறு கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு கோழிகள் தொடர்ந்து சத்தமிட்டதால் சந்தேகம் அடைந்த சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியில் வந்து பார்த்துள்ளனர். அப்போது ஒரு கோழி மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்து கோழியை வேட்டையாடி விட்டு தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இது தொடர்பாக உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கணுவாய் பகுதி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியாகும். குடியிருப்புகள் அதிகம் நிறைந்துள்ள இந்த பகுதியில் அருகே ஆங்காங்கே புதர்கள் தென்படுவதால், அதில் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story