ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மத்தியபிரதேச முதல்வர் சாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மத்தியபிரதேச முதலமைச்சர் தன் மனைவியுடன் சாமி தரிசனம்.

Update: 2021-11-24 09:38 GMT

ஸ்ரீவில்லிபுத்தூரில் மத்தியபிரதேச முதலமைச்சர் தனது குடும்பத்தினருடன் வருகை தந்து ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மத்தியபிரதேச முதலமைச்சர் தன் மனைவியுடன் சாமி தரிசனம். உலக நன்மைக்காக தென்னிந்தியாவில் வழிபாடு செய்து வருவதாக பேட்டி.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மத்தியபிரதேச முதலமைச்சர் தனது குடும்பத்தினருடன் வருகை தந்து ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். குறிப்பாக நேற்று ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு வந்த மத்திய பிரதேசம முதலமைச்சருக்கு ஸ்ரீ ஆண்டாள் கோவில் முன்பு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு கோவில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் ஆண்டாள் பிறந்த நந்தவனம் அதன் பின்பு வடபத்ர சயனர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழக அரசின் முத்திரைச் சின்னமான ராஜகோபுரம் முன்பு தனது மனைவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிவராஜ் சிங் சவுகான் சுதந்திரம் அடைந்த பின்பு ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்த முதல் முதலமைச்சர் என்ற அடிப்படையில் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது குறித்த நமது கேள்விக்கு தான் உலக நன்மைக்காக தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான கோவில்களில் வழிபாடு நடத்தி வருவதாகவும் அதன் அடிப்படையிலேயே இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வருகை வந்திருப்பதாகவும் மேலும் பாரதத்தை விட்டு கொரோணா என்ற கொடிய நோயை விரட்ட ஸ்ரீ ஆண்டாள் சன்னதியில் வழிபாடு செய்திருப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றார் முன்னதாக மத்திய பிரதேச முதலமைச்சர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வருவதையொட்டி சுமார் ஒன்றரை மணி நேரம் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அங்கு குவிந்த பாரதிய ஜனதா கட்சி காரர்களுக்கும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படாத நிலையில் அவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மத்தியபிரதேச முதலமைச்சர் வருகையையொட்டி ஆண்டாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News