பொங்கல் பரிசு விநியோகம்: முறைகேட்டை கண்டித்து மதிமுக எம்எல்ஏ சாலை மறியல்

ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதை தடுக்க வலியுறுத்தி ஆளும் கட்சியின் கூட்டணியான மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சாலை மறியல் போராட்டம்.

Update: 2022-01-12 01:14 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழராஜகுலராமன் பகுதியில் செயல்பட்டு வரும் R77 கூட்டுறவு பண்டகசாலையின் நியாய விலை கடை எண் 6ல், தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் முறையாக வழங்கவில்லை என்றும், இதன் விற்பனையாளர் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக வெம்பக்கோட்டை வட்டாட்சியரிடம் இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வெம்பக்கோட்டை வட்டாட்சியர் தனசேகரன் புகார் அளித்தவர்கள் மீது ஜாதி ரீதியாக கடுமையான வார்த்தைகள் கூறியதாக, மதிமுக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர் ரகுராமனிடம் பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர், ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாச்சியர் தனசேகர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொது மக்களுக்கு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களுடன் சேர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து வந்த வெம்பக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் சிவானந்தம் மற்றும் ராஜபாளையம் காவல்துறை துணை கண் காணிப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமனிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் சம்மந்தபட்டவர்கள் மீது விசாரணை   செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் போராட்டத்தை கைவிட்டார். பொதுமக்களும் கலைந்து சென்றனர். இதனால் ஆலங்குளம் பகுதி சாலை சுமார் 1 மணி நேரம் மேலாக போக்குவரத்து முடங்கியது.

Tags:    

Similar News