ஸ்டாலின் முதல்வராக வேண்டி கை விரலை துண்டித்த திமுக பிரமுகர்

Update: 2021-04-04 07:45 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் திமுக பிரமுகர் ஒருவர், திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று தனது கை விரல்களை துண்டித்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் குருவையா ( 66) இவருக்கு பழனி ஈஸ்வரி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர் . இவர் தீவிர திமுக விசுவாசி. இந்நிலையில் கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்து ஆட்சி அமைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதனால் இவர் ஆண்டுதோறும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வேண்டி வந்துள்ளார்.

இந்த ஆண்டு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் அனைத்து பகுதிகளிலும் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்நிலையில் குருவையா அதிகாலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குச் சென்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று வேண்டி தனது கை விரலை துண்டித்து வேண்டுதல் நிறைவேற்றியுள்ளார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து இருக்கன்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News