திருமண நாளில் தந்தை இறந்ததால் திருமணம் நிறுத்தப்பட்ட சோகம்...

திருமண நாளில் தந்தைக்கு கொரோனா பாதிப்பு.

Update: 2021-05-11 04:55 GMT

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே முத்துசாமிபுரத்தில் மகன் திருமண நாளில் தந்தை கொரோனா பாதிக்கப்பட்டு இறந்ததால் திருமணம் நிறுத்தப்பட்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராஜபாளையம் அருகே புனல்வேலியை சேர்ந்தவர் முனீஸ்வரன். வெளிநாட்டில் பொறியாளராக பணியாற்றி வரும் இவரது மகன் கார்த்திக்கும், ராஜபாளையத்தை சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் நேற்று முன்தினம் முத்துசாமிபுரத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இதற்காக கடந்த வாரம் வெளிநாட்டில் இருந்து வந்த முனீஸ்வரன் திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன் இவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்யாமல் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். ஆனாலும் காய்ச்சல் குறையவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் திருமண நாளான நேற்று முன்தினம் அதிகாலை இவருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முன்னதாக முனீஸ்வரன் உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து திருமணம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் இரு வீட்டாரின் உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சுகாதார துறையினர் அப் பகுதியில் முகாமிட்டு பரிசோதனை செய்து வருகின்றனர். அப் பகுதியை சேர்ந்த 6 நபர்கள் ஏற்கெனவே கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 24 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

திருமண வீட்டை சேர்ந்த 38 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்த சம்பவம், இதனை தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டது போன்ற பரபரப்பு சம்பவங்களால் அப் பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News