விழுப்புரம் மாவட்டத்தில் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் செப். 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடக்கவுள்ளதாக கலெக்டர் மோகன் தகவல் தெரிவித்துள்ளார்

Update: 2021-09-09 08:30 GMT

விழுப்புரம் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்கள் அனைவரது பாதுகாப்பு நலனை கருத்திற்கொண்டு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 12.09.2021 அன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது,

இது குறித்து மாவட்ட கலெக்டர் மோகன் கூறியதாவது. தமிழகத்தில் அரசு கொரோனா நோய் தடுப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு தமிழக மக்களை கொரோனா நோய் தொற்றிலிருந்து காத்திடும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்கள் கொரோனா நோயிலிருந்து தற்காத்து, தங்களது உயிரினை காப்பாற்றி கொண்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா நோய்தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது, விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிப்பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையான 20,69,842, இதில் இதுவரை 6,61,017 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளனர், இவர்களில் 55.000 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவை விரட்ட நூறு சதவீதம் தகுதியுடைய அனைத்து நபர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் வருகின்ற 12.09.2021 அன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.  மாவட்டத்தில் தகுதியுடைய அனைத்து பொதுமக்களும், தங்களுடைய குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும்.

விழுப்புரம் மற்றும் திண்டிவனம் ஆகிய நகராட்சிகளில் உள்ள 75 வார்டுகளிலும், 8 பேரூராட்சிகளிலும் 688 ஊராட்சிகளிலும், அங்கன்வாடி பள்ளிகள்/கல்லூரிகள், 100 நாள் வேலை இடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் ஊராட்சி மற்றும் தனியார் பணியிடங்கள் என 1150  இடங்களில் 10 ஆயிரம் பணியாளர்களை கொண்டு நடக்கும் மெகா தடுப்பூசி முகாம்களில் 1லட்சத்து,50 ஆயிரம் தடுப்பூசி இலக்கு நிர்ணயித்து முகாம் நடக்கிறது.

இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களது குடும்பத்தினருடன் சென்று தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயன்பெற்று மாவட்டத்தில் கொரோனா மூன்றாவது அலை இல்லாத நிலையை உருவாக்கிடவும், நமது மாவட்ட வளர்ச்சிப்பணிகளுக்கு ஒத்துழைப்பு தங்கிடவும் பொதுமக்களிடம் அண்புடன் கேட்டுக் கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

Similar News