சுதந்திர தின கொடியேற்றும் பணி: உதாசீனப்படுத்திய ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்

விக்கிரவாண்டி அருகே வடக்குச்சிபாளையம் ஊராட்சியில் சுதந்திர தின கொடியேற்றும் பணியை உதாசீனப்படுத்திய ஊராட்சி செயலர் முருகன் பணியிட நீக்கம்

Update: 2022-08-14 16:05 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் ஆட்சியர் மோகன் சுதந்திர தின ஏற்பாடுகள் குறித்த நேரில் சென்று ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார், அப்போது சுதந்திர தின ஏற்பாடுகளில் மெத்தனமாக செயல்பட்ட வட குச்சிபாளையம் ஊராட்சி செயலரை பணியிடநீக்கம் செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி: ஊராட்சி ஒன்றியம் வடகுச்சிப்பாளையம் மற்றும் மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரமண்டூர். அவ்வையார் குப்பம், வெங்கந்தூர் ஆகிய ஊராட்சிகளில், (14.08.2022) ஞாயிற்றுக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஸ்ரீநாதா முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மோகன், ஒவ்வொரு ஊராட்சிகளிலும் தேசியக்கொடி ஏற்றுவதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்,

அப்போது அவர் கூறுகையில் சுதந்திர தினத்தை பொறுத்தவரை, தலைமைச் செயலகத்திலிருந்து தொடங்கி கிராம ஊராட்சிகள் வரை எல்லா அரசு அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேசியக்கொடி ஏற்றுவது மரபாக இருந்து வருகிறது.

அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எல்லா அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி, நகராட்சி மற்றும் கிராம ஊராட்சி அலுவலகத்திலும் தேசியக்கொடி ஏற்றுவதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியரும் , மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது, விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம், வடகுச்சிபாளையம் ஊராட்சியில், நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளாமலும் மெத்தனமாக இருந்ததுடன், தேசியக்கொடி ஏற்றுவதற்கான கம்பம் தயார் செய்யாமலும், ஊராட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்காமலும் இருந்ததை கண்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன், ஊராட்சி செயலர் முருகனை தற்காலிக பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

இந்த ஊராட்சியின் தலைவராக இருப்பவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த கலியபெருமாள் என்பதும்,  சுதந்திர தின கொடி ஏற்றுவதில் அந்த ஊராட்சியில் மெத்தனபோக்கு என்ற பலமான கேள்விகள் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News