கழுவெளி ஏரி பராமரிப்பு: 29 கிராமங்கள் பயன்பெறும்

மரக்காணம் அருகே உள்ள கழுவெளி ஏரி பராமரிப்பு பணிகளால் 29 கிராமங்கள் பயன்பெறும் என அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.

Update: 2022-09-11 08:55 GMT

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே அமைந்துள்ள கழுவெளி ஏரியில் நீா்வளத் துறை சாா்பில் ரூ.160 கோடியில் புதிய கட்டமைப்பு ஏற்படுத்தி, கடல்நீா் உள்புகுதலைத் தடுக்கும் வகையில் தடுப்பணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை அமைச்சா் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கழுவெளி  ஏரி சுமாா் 70 சதுர கி.மீ. பரப்புள்ளது. மரக்காணத்தின் வடக்கே கடலில் இணையும் இந்த ஏரியை மீட்டு தண்ணீா் தேக்குதல், கடல்நீா் உள்புகுதலைத் தடுத்து விவசாய நிலங்களைப் பாதுகாத்தல், நன்னீரை சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்தும் தடுப்பணை அமைத்தல், புதிய கரை அமைத்தல், நீா் கொள்ளளவை அதிகரித்தல் உள்ளிட்ட மேம்பாடுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம் சுற்றுப்புற கிராமங்களான ஊரணி, வண்டிப்பாளையம், ஆத்திக்குப்பம், அனுமந்தை, கந்தாடு, கொள்ளிமேடு, திருக்கனூா், எம்.புதுப்பாக்கம், நடுக்குப்பம், ஓமிப்போ், சித்தனப்பாக்கம், நாணகல்மேடு, தேவனந்தல், காரட்டை, அடசல் உள்ளிட்ட 29 கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் மேம்படும். விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என அமைச்சா் தெரிவித்தார்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் த.மோகன், மரக்காணம் ஒன்றியக் குழுத் தலைவா் தயாளன் உட்பட பலர் உடனிருந்தனா். 

Tags:    

Similar News