மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி முதல்வர் போக்சோவில் கைது

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக எழுந்த புகாரில் பள்ளியின் முதல்வர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

Update: 2024-01-18 11:28 GMT

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக எழுந்த புகாரில் அப்பள்ளியின் முதல்வர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை கூட்டேரிப்பட்டில் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இப்பள்ளியின் முதல்வராக கார்த்திகேயன் இருந்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளை தனது அறைக்கு அழைத்து கை, கால்களை அழுத்த சொல்லி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால் முதல்வர் அழைத்தால் அவரது அறைக்கு செல்ல மாணவிகள் பயந்தனர்.

இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இரு மாணவிகளுக்கு 2023, அக்டோபர் மாதம் முதல் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் பாலியல் தொல்லை அளித்து வந்தாராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் தாய், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜனவரி 14-ஆம் தேதி புகாரளித்தார். இதைத் தொடர்ந்து தனியார் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் கார்த்திகேயன் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் கார்த்திகேயனை வியாழக்கிழமை கைது செய்த காவல்துறையினர், அவரை விழுப்புரம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை பிப்ரவரி 1-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். ஹர்மீஸ் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News