திண்டிவனத்தில் அடிப்படை வசதி கேட்டு விடுதி மாணவர்கள் ஸ்ட்ரைக்

திண்டிவனத்தில் அடிப்படை வசதி கேட்டு ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-23 11:59 GMT

திண்டிவனத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி விடுதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள அரசு கல்லூரியில் கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்கள் இந்த கல்லூரி அருகே ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இயங்கி வரும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் 75 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை கல்லூரி செல்லாமால் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

மேலும் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நல்ல முறையில் இல்லாததால் அவர்கள் உணவை சாப்பிட மறுத்து திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த திண்டிவனம் தாசில்தார் வசந்தகிருஷ்ணன் மற்றும் ரோசணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் ஆகியோர் நேரில் வந்து, மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, மாணவர்கள் விடுதியில் குடிநீர், கழிப்பறை வசதிகள் எதுவும் சரியான முறையில் இல்லை. மேலும் எங்களுக்கு தயார் செய்து வழங்கப்படும் உணவும் நல்ல முறையில் இல்லை. அதோடு இரவு நேரத்தில் மின்விளக்குகள் சரியாக எரியாததால் எங்க தொட்டாலும் ஷாக் அடிக்கிறது. எங்களால் படிக்க முடியாமல் போய்விடுகிறது.

மேலும் விடுதியை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் எங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. ஆகையால் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து தாசில்தார் கூறுகையில், இன்னும் ஒரு வாரத்தில் மாற்று இடம் வழங்கப்படும் எனவும், புதிய கட்டிடம் விரைவில் கட்டப்படும் என்று தெரிவித்தார். இதையேற்று மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்து உணவை சாப்பிட்டனர்.

Tags:    

Similar News