திண்டிவனம்: வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை

திண்டிவனம் நகரில் வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி நகை பணம் கொள்ளையடித்தனர்.

Update: 2022-02-21 15:35 GMT

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உதயம் நகரை சேர்ந்தவர் சையத் அசீன் (வயது 44). இவர் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் திண்டிவனம் 13-வது வார்டில் போட்டியிட்டார்.இவர் தேர்தல் பணிகள் தொடர்பாக தொடர்ந்து வீட்டுக்கு செல்லாமல் கட்சி அலுவலகத்தில் இருந்துள்ளார்.இன்று காலையில் சையத் அசீன் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் நகை,. ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப் பணம் மற்றும் டி.வி. ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.இது குறித்து சையத் அசீன் திண்டிவனம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

இது தவிர மேலும் 5 வீடுகளின் கதவை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.திண்டிவனம் பகுதியில் தினமும் போலீசார் இரவு ரோந்து செல்வது வழக்கம். தற்போது தேர்தல் நேரம் என்பதால் ரோந்து பணி நடக்காமல் இருப்பதை பயன்படுத்தி கொள்ளையர்கள் தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, போலீசார் தினமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News