குடும்ப தகராறில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவர் கைது.
வாணியம்பாடியில், குடும்ப தகராறில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்;
மனைவியை சரமாரியாக வெட்டிய கணவர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கிட்டு (27). இவரது மனைவி மஞ்சுளா (22). இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த கிட்டு, இன்று வாணியம்பாடி - மேட்டுபாளையம் மேம்பாலம் அருகே பாலாற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த மஞ்சுளாவிடம் மீண்டும் தகராறு செய்தார். அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மஞ்சுளாவின் தலை, நெற்றி, கை மற்றும் கால்களில் சரமாரியாக வெட்டினார். அப்போது தடுக்க வந்த காமராஜபுரம் பகுதியை சேர்ந்த செல்வி (45) என்பவரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்
படுகாயமடைந்த மஞ்சுளா, செல்வி ஆகிய இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர போலீசார் விசாரணை நடத்திய பின்னர் தப்பி ஓடிய கிட்டு உதயேந்திரம் பகுதியில் மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது