ஜோலார்பேட்டை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறித்தவர் கைது

ஜோலார்பேட்டை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்று தலைமறைவானவர் கைது

Update: 2021-11-06 11:32 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் என்பவரின் மனைவி சுமிதா.  இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி  வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது, செல்போன் பேசிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  பைக்கில் வந்த  3 பேர் சுமிதா செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றனர். ஆனால் சுமிதா தனது செல்போனை கெட்டியாக  பிடித்து கொண்டிருந்ததால் செல்போனை பிடுங்க முயன்ற மர்ம நபர்கள் மூன்று பேரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இரண்டு பேரைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். அதில் ஒருவர் மட்டும் தப்பி மாயமானார்.

இந்நிலையில் சுமிதா கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தன், கார்த்திக் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பிச் சென்ற கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளபடி பகுதியை சேர்ந்த வேடியப்பன் என்பவரின் மகன் சூர்யா (21) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் ஏலகிரி மலை பொன்னேரி கூட்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்ற வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஏற்கனவே சுமிதா என்பவரிடம் செல்போன் பறித்துக் கொண்ட வழக்கில் தலைமறைவானவர் என்பது  தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News