ஜோலார்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி பயணிகள் வாக்குவாதம்..பரபரப்பு

ஜோலார்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-11-20 16:39 GMT

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்.

கொச்சிவேலியில் இருந்து கோரக்பூர் செல்லும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று புறப்பட்டது. இதில் பயணம் செய்த பயணிகள் கழிவறை கூட செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளனர். அந்த அளவிற்கு முன்பதிவு செய்யாத பயணிகள் ஏராளமானோர் பயணம் செய்தனர். நிற்பதற்கு கூட இடமில்லாததால், வாலிபர்கள் கழிவறையையும் ஆக்கிரமித்தனர். இதனால் கழிவறை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று காலை ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வந்தடைந்தது. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வந்து நின்றதும், உடனே 3 நிமிடத்தில் ரயில் புறப்பட தயாரானது. ஜோலார்பேட்டையிலும் அதிகளவில் பயணிகள் ஏறியதால் கூட்ட நெரிசல் மேலும் அதிகரித்தது. பரிதவித்த பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.

இதனை அறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக விரைந்து சென்று எஸ்-3 பெட்டியில் கழிவறையில் இருந்த பயணிகளை அப்புறப்படுத்தினர். மேலும் யாரும் கழிவறையில் பயணம் செய்யக்கூடாது என எச்சரித்தனர். அப்போது பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளுடன் கடும் வாக்குவத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் பல பெட்டிகளில் பயணம் செய்வதாகவும், இதனால் நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகள் பரிதவிப்பதாக புகார் தெரிவித்தனர். ரயில் நிலைய அதிகாரிகள், உடனடியாக சோதனை செய்தனர். அப்போது எஸ்-1,எஸ்-2, எஸ்-3 ஆகிய 3 முன்பதிவு பெட்டிகளிலும் பதிவு செய்யாத பயணிகள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்தது. அவர்களையும் போலீசார் ஜோலார்பேட்டையில் இறக்கி விட்டனர்.

இதனைத் தொடர்ந்து 15 நிமிடம் கால தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News