திருச்சி-கருணை கொலைக்கு அனுமதி கேட்டு வந்த முதியவரால் பரபரப்பு
கருணை கொலை செய்து கொள்வதற்கு அனுமதி கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருச்சியை அடுத்த முக்கொம்பு அருகில் உள்ள திருப்பராய்த்துறை அனலை கிராமத்தை சேர்ந்தவர் வீரமலை (வயது 81). இவருக்கு தவசிமணி மற்றும் லட்சுமி என 2 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி பாக்கிய லட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார்.
தவசி மணி மாற்றுத்திறனாளி என்பதால் வீரமலை தன்னுடைய வீட்டில் காய்கறி கடை ஒன்றை வைத்து உதவி வந்துள்ளார். தனது இன்னொரு மகள் லட்சுமியை திருமணம் செய்து கொடுத்துள்ளார். மாற்றுத்திறனாளி என்பதால் தன்னிடத்தில் உள்ள வீடு, இடம், பணம் போன்ற அனைத்திலும் தவசிமணிக்கு பங்கு உண்டு என்று கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் தவசிமணியின் தங்கை லட்சுமி, உன்னையும் அப்பாவையும் நல்லபடியாக பார்த்துக் கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி சொத்து பணம், இடம் உள்ளிட்ட அனைத்தையும் அபகரித்துக் கொண்டு வெளியே செல்லுங்கள் என்று அனுப்பியுள்ளார்.
இதனால் மனம் உடைந்த வீிரமலை இன்று தனது மகள் தவசிமணி மற்றும் அவரது குழந்தைகளுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.தனது சொத்துக்களை அபகரித்துள்ள இளைய மகள் லட்சுமியிடம் இருந்து பணம் மற்றும் நிலத்தை மீட்டு தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் கருணை கொலை செய்து கொள்வதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என கோரி மனு கொடுத்தார்.