திருச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

திருச்சியில் சிறுமி கர்ப்பத்திற்கு காரணமான வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2021-10-03 07:15 GMT

கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையம் (பைல் படம்)

திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் வீரமணி (வயது 21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த  15 வயது சிறுமிக்கும் திருமணம் நடத்துவதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த மாவட்ட சமூக நல அலுவலர்கள் விசாரணை நடத்தி திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட சிறுமி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் மாதம் ஒருமுறை ஆஜராகி கையெழுத்திட உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மாதந்தோறும் சமூக நல அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட அந்த சிறுமி கடந்த 3 மாதமாக ஆஜராகவில்லை. இதனால் சந்தேகமடைந்த சமூக நல அலுவலர்கள் சம்பந்தப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு விசாரணைக்காக நேரில் சென்றனர்.

அப்போது அந்த சிறுமி கர்ப்பமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சமூக நல அலுவலர் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான வீரமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News