திருச்சி மாநகராட்சி ஒப்பந்ததாரர்களால் அலைக்கழிக்கப்படும் வாகன ஓட்டிகள்

திருச்சியில் அறிவிப்பு பலகை வைக்காமல் சாலையை முற்றிலும் அடைத்து நடைபெறும் கட்டுமான பணிகளால் வாகன ஓட்டிகள் நாள்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2021-07-02 07:43 GMT

திருச்சியில் பாலம் வேலை நடைபெறுவதால் எந்த அறிவிப்பு பலகையும் இல்லாததால் சூலக்கரை மாரியம்மன் கோவிலை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

திருச்சியில் அறிவிப்பு பலகை வைக்காமல் சாலையை முற்றிலும் அடைத்து நடைபெறும் கட்டுமான பணிகளால் வாகன ஓட்டிகள் நாள்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில், திருச்சி- தஞ்சை சாலை சூலக்கரை மாரியம்மன் அருகே சாலையின் நடுவில் சாக்கடைக்கான தரைப்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகள் நடைபெறுவது நல்ல விஷயம் என்றாலும், இதனால் வாகன ஓட்டிகள் தற்போது அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக, பழைய பால் பண்ணை பகுதியிலிருந்து காந்தி மார்க்கெட் வரை செல்லும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அந்த வழியாக வருகின்றன. பாலம் வேலை நடைபெறுவதால் சூலக்கரை மாரியம்மன் கோவிலை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. சாலை அடைக்கப்பட்டு கட்டுமான பணி நடைபெறுவது குறித்து எவ்வித அறிவிப்பும் சாலையின் நுழைவு பகுதி அருகே மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சார்பில் வைக்கப்படவில்லை.

அவ்வாறு அறிவிப்பு பலகையோ, தடுப்புகளோ வைக்கப்பட்டிருந்தால், வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் அந்த சாலையில் வராமல் மாற்றுப் பாதையில் செல்வார்கள். ஆனால், தற்போதைய நிலையால் வாகன ஓட்டிகள் பால் பண்ணையில் இருந்து சூலக்கரை மாரியம்மன் கோவில் வரை வந்துவிட்டு வழி இல்லாததால் மீண்டும் திரும்பிச் செல்லும் சூழல் நிலவுகிறது.

இதேபோல், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சோனா மீனா தியேட்டர் செல்லும் வில்லியம்ஸ் சாலையிலும் இந்நிலை நீடிக்கிறது. அங்குள்ள முனீஸ்வரன் கோவில் அருகே சாக்கடை தரைப்பாலம் கட்டுமான பணி முற்றிலும் சாலையை அடைத்து நடைபெறுகிறது. இந்த சாலையின் நுழைவு பகுதியான காஞ்சனா ஓட்டல் அருகே எவ்வித அறிவிப்பு பலகையோ, தடுப்புகளோ வைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் நீண்டதூரம் சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தில்லைநகர் பகுதிகளிலும் இதேநிலைதான் நீடிக்கிறது.

ஆகையால், மாநகராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு வாகன ஓட்டிகள் அலைக்கழிக்கப்படுவதை தடுக்க அறிவிப்பு பலகைகளை, தடுப்புகளை நுழைவு பகுதியில் வைக்க வேண்டும் என்று திருச்சி மாநகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News