திருச்சியில் மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஸ்டர் மண்டை உடைப்பு

திருச்சியில் மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஸ்டர் மண்டை உடைக்கப்பட்டது. 2பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-04 09:30 GMT

திருச்சியில் தாக்கப்பட்ட பாஸ்டர் அடைக்கலராஜ்

திருச்சி வரகனேரி வடக்கு பகுதியை சேர்ந்தவர் அடைக்கலராஜ் (வயது 57). இவர் திருச்சி-தஞ்சாவூர் ரோட்டில் உள்ள ஏ.ஜி.சர்ச்சில் கடந்த 20 வருடமாக பாஸ்டர் ஆக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் வரகனேரி வா.வே.சு. ஐயர் படிப்பகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வரகனேரியை சேர்ந்த அருண், கோபி என்ற இரு வாலிபர்கள் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அவர்களிடம் சென்ற பாஸ்டர் அடைக்கலராஜ் உங்கள் கஷ்டம் தீர நான் ஜெபிக்கிறேன். என்று கூறி மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபர் பாஸ்டர் அடைக்கலராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது ஒரு கட்டத்தில் வாய் தகராறாக மாறி, அடைக்கலராஜை மூன்று வாலிபர்களும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சதீஷ் அருகே கிடந்த உருட்டுக்கட்டையால் அடைக்கலராஜ் மண்டையில் அடித்ததில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அடைக்கலராஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து கோபி, சதீஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News