திருச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்த முயன்ற வாலிபர் கைது

திருச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்த முயன்ற வாலிபரை கைது செய்து 10 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-09-24 05:00 GMT
திருச்சி விமான நிலையம் (பைல் படம்)

மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களோடு கொரியர் மூலம் போதைப்பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திருச்சியில் இருந்து வெளிநாட்டிற்கு கொரியர் அனுப்ப வந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், சுமார் 10 கிலோ எடை கொண்ட கவர் ஒன்றை கொரியர் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள எட்டரை கோப்பு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 32) என்பதும் அவர் கொண்டு வந்த பார்சலை பிரித்து சோதனை செய்தபோது அதில் சுமார் ஒரு கோடி ரூபாய்  மதிப்பிலான 10 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் இருந்ததும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் எட்டரை கோப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அவரை திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி முசிறி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News