திருச்சியில் அரசு பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் மன உளைச்சல் காரணமாக அரசு மருத்துவமனை பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-20 05:30 GMT
திருச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் டாக்டர் 

திருச்சி சுப்ரமணியபுரம் ஏரிக்கரை ரோட்டைச் சேர்ந்தவர் டாக்டர் சஞ்ஜினி (வயது 30). மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல டாக்டரான இவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் சுப்பிரமணியபுரம் பகுதியில் தனியாக கிளினிக் ஒன்றையும் வைத்து நடத்தி வந்துள்ளார்.

இவருக்கும் துறையூரை சேர்ந்த டாக்டர் கோகுல் என்பவருக்கும் காதல் ஏற்பட்டு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 3 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஆனால் என்ன காரணமோ கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக டாக்டர் சஞ்ஜினி கணவரை விட்டு கடந்த 3 மாதத்துக்கு முன்பு பிரிந்து வந்து விட்டார்.

விவாகரத்து பெறுவதற்காக வழக்கும் தொடர்ந்து விட்டு தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது ஒரு வயது மகனுக்கு நேற்று காதுகுத்து நிகழ்ச்சி நடந்துள்ளது. இதற்காக  நடைபெற்ற நிகழ்ச்சியில் உறவினர்கள் ஏராளமான வந்துள்ளனர். வந்தவர்கள் குழந்தையின் அப்பா எங்கே? அப்பா எங்கே? என்று தான் கேட்டுள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சஞ்ஜினி நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கே.கே.நகர் அனைத்து மகளிர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் முதல் கட்ட விசாரணையில் காதுகுத்து நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் விவாகரத்து விவரம் தெரியாமல் கணவர் எங்கே என்று ஒரே மாதிரியாக கேட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News