கன்னித்தீவு போல் நீளுமா திருச்சி காவிரி ஆறு மேம்பாலம் பராமரிப்பு பணி?

கன்னித்தீவு போல் நீளுமா திருச்சி காவிரி ஆறு மேம்பாலம் பராமரிப்பு பணி என பொதுமக்கள் ஐயம் எழுப்பி வருகிறார்கள்.

Update: 2023-02-06 06:34 GMT

மூடப்பட்டுள்ள திருச்சி காவிரி பாலம்.

மலைக்கோட்டை நகரமாம் திருச்சியையும்,108 திவ்ய தேசங்களில் முதன்மையான புண்ணிய பூமியான பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவிரி ஆறு பாலம் மிகவும் பழமையானது. இதனை கருத்தில் கொண்டு இந்த பாலத்தில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த செப்டம்பரில் துவங்கப்பட்ட திருச்சி காவிரி மேம்பால பணிகள் எப்பொழுது முடிக்கப்படும் என்ற கேள்விக்கு டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி என்று மாதங்களை குறிப்பிட்டு பதில் நீண்டு கொண்டே தான் செல்கிறதே தவிர, மேம்பால பணிகள் எப்பொழுது முடியும் என்ற பதில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் கூட இல்லை.

முதலில் கார் உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்தை காவிரி மேம்பாலத்தில் தடைசெய்தனர். பின்னர்  இரு சக்கர வாகன போக்குவரத்தை மட்டும் அனுமதித்து மேம்பால பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து போக்குவரத்தை முழுமையாக நிறுத்தினால் மட்டுமே பால பணிகள் விரைவுபடுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததை தொடர்ந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தியாகிவிட்டது. ஆனாலும் காவிரி மேம்பால பணிகள் இன்றும் முடிவடையவில்லை.

இந்த மேம்பால பணிகளால் பொதுமக்கள் படும் இன்னல்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கடந்த 04.12.2022ந் தேதி ஞாயிற்றுக் கிழமை 4-மணி நேர ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை இதற்கு உதாரணமாக கூறலாம். அதற்கு முன்னதாக  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவிலும் திருச்சி மாவட்ட மக்கள் மட்டும் இன்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த அரங்கனின் பக்தர்களும் கடும் அவதி அடைந்தனர்.

கடந்த 2022 டிசம்பர் 28ந் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் 2023-ஜனவரிக்குள் காவிரி மேம்பால பணிகள் முடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதியளித்ததாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சொன்ன கால அவகாசம் தாண்டியாகிவிட்டது.

தற்பொழுது உள்ள பணியாளர்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை கொண்டு பணி மேற்கொண்டால் மட்டுமே காவிரி மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

காவிரி பாலம் மேம்பாலத்தின் பராமரிப்பு பணி இப்படி நீண்டு கொண்டே போவதை பார்த்தால் தினத்தந்தியின் கன்னித்தீவு படக்கதை போல் செல்கிறதே என மக்கள் ஐயம் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இந்த பாலம் பணி முடிவடையாமல் சென்று கொண்டே இருப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சென்னை  பைபாஸ் சாலையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தான் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.  போக்குவரத்து நெரில் வேறு. 

எனவே திருச்சி மாவட்ட ஆட்சியர் இதில் கூடுதல் கவனம் செலுத்தி பாலம் பராமரிப்பு பணியை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என  மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டசெயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News