ரேஷன் கடை அமைக்க நிதி ஒதுக்கிய எம்.எல்.ஏ.விற்கு நலச்சங்கத்தினர் பாராட்டு

ரேஷன் கடை அமைக்க நிதி ஒதுக்கிய எம்.எல்.ஏ.விற்கு திருச்சி ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் நலச்சங்கத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2023-01-24 08:01 GMT

திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜை சந்தித்த ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கத்தினர்.

திருச்சி மாநகராட்சி 61வது வார்டில் உள்ளது ஜே.கே.நகர். ஜே.கே.நகரை சுற்றி ஆர். எஸ். புரம், முகமது நகர், திருமுருகன் நகர், ஆர். வி. எஸ். நகர், ராஜகணபதி நகர், லூர்துநகர், பாரதிநகர் விரிவாக்க பகுதி, டி.ஆர்.பி. நகர் ஆகியவை உள்ளன. இப்பகுதி மக்கள் தங்களது குடும்ப அட்டைகளுக்கு உரிய அரிசி, பருப்பு ,சர்க்கரை,கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும், அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு ரேஷன் கடையை தேடி காந்திநகர், காஜாமலை, டி.வி.எஸ். நகர் பகுதிக்கு தான் செல்லவேண்டியது உள்ளது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறார்கள்.

எனவே ஜே.கே.நகர் பகுதி விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கத்தின் சார்பாக ஜே.கே.நகரில் ஒரு ரேஷன் கடை அமைத்து தர சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என கோரி 10-9-2022 அன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த கோரிக்கையை ஏற்று 07.01.2023 அன்று சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதய ராஜ் ஜே.கே.நகர் பகுதிக்கு வருகை தந்தார். ரேஷன்கடை அமைப்பதற்கு ஆர்.எஸ்.புரம் வடக்கு பூங்கா அருகில் உள்ள மாநகராட்சி இடத்தை தேர்வு செய்து சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரேஷன்கடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிப்பு செய்திருந்தார்.


அதற்கு நன்றி தெரிவித்து பாராட்டும் விதமாக ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் நலச்சங்க தலைவர் திருஞானம், செயலாளர் சங்கர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.வை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து நன்றி கடிதம் கொடுத்தனர்.

அப்போது நகரில் விரைவில் நடைபெற உள்ள விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். பின்னர் சங்க நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினருடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

Tags:    

Similar News