ஆசிய அளவிலான வலுதூக்கும் சாம்பியன் தினேசிற்கு திருச்சியில் வரவேற்பு
ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தினேசிற்கு திருச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.;
வலு தூக்கும் போட்டியில் ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற தினேசிற்கு திருச்சியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஆசிய அளவிலான வலு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற தினேஷிற்கு மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு சார்பாக திருச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சி, சுப்பிரமணியபுரம், கோனார் தெருவைச் சேர்ந்தவரும் கமலா நிகேதன் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருபவரும், டி.என்.ஏ. புரோ பிட்னஸில் பயிற்சி பெறுபவருமான ஆர். தினேஷ் (வயது17) கேரளா மாநிலம் ஆலப்புழா வில் மே 2 முதல் 6 முடிய ஆசியா பவர்லிப்டிங் (வலுதூக்கும்) சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் சப்-ஜூனியர்66 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு ஸ்குவாட்டில் 232.5 கிலோ எடையைத் தூக்கி தங்கமும், பென்ஞ் பிரஸ்சில் 130 கிலோ எடை தூக்கி தங்கமும், டெட்லிப்டில் 235 கிலோ எடை தூக்கி தங்கமும், என மொத்தம் 597.5 கிலோ எடையைத்தூக்கியதற்காக தங்கம் என 4 தங்கப் பதக்கங்களை வென்றார்.
சப்ஜூனியர் பிரிவில் அனைத்து எடைப் பிரிவுகளிலும் அதிகபட்ச எடை தூக்கியவர் என்பதைப் பாராட்டி இவருக்கு 'ஸ்டிராங்மேன்' என விருதும் வழங்கப்பட்டது.
இவர் ஏற்கனவே நவம்பர் 2022ல் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு 4 தங்கம் வென்றார். ஸ்ட்ராங்மேன் விருதும், டெட்லிப்டில் முந்தைய சாதனையை முறியடித்தும் புதிய சாதனை படைத்தார். மேலும் 'பார்ன் சூட்டர்’ சென்டரில் பயிற்சி பெற்ற இவர் நியூடெல்லியில் சென்ற மாதம் நடைபெற்ற 10 மீ. துப்பாக்கி சுடும் போட்டியில் ஜூனியர் வேர்ல்டு சாம்பியன் தகுதிச் சுற்று T3 & T4 ல் கலந்து கொண்டு அடுத்த சுற்றுக்கு தேர்வாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று திருச்சி வந்த தினேசிற்கு டி.என்.ஏ.புரோ பிட்னஸ் மாஸ்டர் ஜுபேர் அகமது, மெஹபூப்கான். மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் இரா. இளங்கோ, மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் தண்ணீர் கே.சி.. நீலமேகம், தண்ணீர் அமைப்புசெயலாளர் சதீஸ்குமார், திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் தமிழ் செம்மல் கோவிந்தசாமி. ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.