திருச்சியில் வருகிற 28-ம் தேதி யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு
திருச்சியில் வருகிற 28-ம் தேதி யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது.;
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மூலமாக நடைபெறவுள்ள குடிமை பணிகள் முதல் நிலை தேர்வு 2023, வருகின்ற 28.05.2023 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி தேர்வு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், 14 தேர்வு மையங்களில் 5032 நபர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.இப்பணிகளுக்கென 14 தேர்வுக்கூட மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டித்தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 5 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் துணை ஆட்சியர் நிலையில் ஓர் அலுவலர் துணை வட்டாட்சியர், ஆயுதம் ஏந்திய காவலர் ஒருவர் ஆகியோர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு சிறப்பான முறையில் நடைபெறுவதை ஆய்வு செய்யும் பொருட்டு வட்டாட்சியர் நிலையில் 14 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறை மூலம் உரிய பாதுகாப்பு பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் தேர்வுக்கு வரும் நபர்களை சோதனை செய்திட, 3 ஆண் காவலர்கள், மற்றும் 2 பெண் காவலர்கள் என மொத்தம் 5 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு அறைகளில் தேர்வு எழுதும் 24 நபர்களுக்கு இரண்டு அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு சிரமமின்றி செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் கோவிட்-19 நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்லிடை பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை என தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.