திருச்சியில் கத்தியால் கையை கிழித்து செல்போன் பறித்த 2 பேர் கைது

திருச்சியில் வியாபாரியின் கையில் கத்தியால் கீறி செல்போன் பறித்த 2 பேரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-13 15:45 GMT

திருச்சி நவலூர் குட்டப்பட்டு வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் பதீர்த்தலோன் (வயது 24). இவர் திருச்சி தில்லை நகர், 10-வது குறுக்கு ரோட்டில் உள்ள மொபைல் பேஸ்கட் என்ற கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்போனுக்கு உதிரிபாகங்கள் வாங்க திருச்சி சிங்காரத்தோப்பு அருகே மதுரை ரோட்டில் உள்ள சூர்யா காம்ப்ளக்ஸ்க்கு, கோட்டை ரயில் நிலையம் வழியாக நடந்து வந்த போது இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து வலது கையில் கத்தியால் கிழித்து விட்டு அவரிடமிருந்த நவீன ரக செல் போனை பறித்து சென்று விட்டனர்.

இது குறித்து பதீர்த்தலோன் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்றும் அதே போல சென்ற போது பதீர்த்தலோனை கத்தியை காட்டி மிரட்டிய இரண்டு பேரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் பிடித்து கோட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில் திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அஜ்மத் அலி (வயது 20), அபுதாகிர் (வயது 20) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவர் தான் பதீர்த்தலோனை சம்பவத்தன்று கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News