திருச்சி மலைக்கோட்டை கோயில் தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-03-10 14:00 GMT

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவசுவாமி கோயிலுக்கு சென்று மனமுருகி சிவனை வழிபட்டால் சுகப்பிரசவத்தில் குழந்தை பேறு கிட்டும் என்பது ஐதீகம். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் உத்திரத்திற்கு முந்தைய நாளில் கோயில் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படிவருகிற 17-ம்தேதி வியாழக்கிழக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு மேல் தெப்பதிருவிழா நடைபெற உள்ளது. இதற்காக  மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா தொடங்கியது. முன்னதாக தாயுமானவ சுவாமி சன்னதியில் உள்ள தங்ககொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது.


பின்னர் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருழச்செய்து,மேளதாளங்கள் முழங்கிட ரிஷபக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த தெப்பத்திருவிழா தொடங்கியதை தொடர்ந்து நேற்று முதல் சுவாமி, அம்பாள் முறையே கற்பகவிருட்ச வாகனம், பூதவாகனம், வெள்ளி ரிஷப வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு வானங்களில் பறப்பாடு செய்யப்பட்டு வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா வரும் 17-ந்தேதி இரவு நடைபெறும்.

அப்போது அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். தொடர்ந்து 18-ந்தேதி தீர்த்தவாரியும், இரவு அவரோகணம் எனப்படும் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் கோயில் ஊழியர்களும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா விற்கான முன்னேற்பாடு நிகழ்ச்சியாக தெப்பக்குளத்தை சுற்றி வர்ணம் அடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த வருடம் இதற்கான எந்த ஏற்பாடும் செய்யாமல் இருப்பது பக்தர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News