திருச்சி நாடாளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் தாமோதரன் வாக்கு சேகரிப்பு

திருச்சி நாடாளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் தாமோதரன் கிராம பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

Update: 2024-04-09 16:17 GMT

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருச்சி தொகுதி சுயேச்சை வேட்பாளர் தாமோதரன்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ ,அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக கருப்பையா, பாரதிய ஜனதா கூட்டணியில் அமமுக வேட்பாளராக செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்  போட்டியிடுகிறார்கள். இது தவிர சுயேச்சைகள் உள்பட மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

சுயேச்சை வேட்பாளர்களில் எஸ். தாமோதரன் என்பவரும் முக்கியமான ஒருவராக உள்ளார். சமூக ஆர்வலரான இவர் திருச்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமாலயா என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக பொது இடங்களில் மலம் கழிப்பதை மக்கள் தவிர்க்கும் வகையில் கழிவறைகளை கட்டிக் கொடுத்து உள்ளார். மேலும் கிராம மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கும் பல்வேறு பணிகள் செய்துள்ளார். பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார். இந்த தேர்தலில் தாமோதரன் சுயேச்சையாக களம் இறங்கி உள்ளார்.


தொண்டு நிறுவனம் மூலம் இவர் செய்த சேவைக்காக இவருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதினை அவர் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடமிருந்து பெற்றுள்ளார். அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக தாமோதரன் திருச்சி வயலூர் சாலையில் குமரன் நகர் இரண்டாவது தெருவில் வேட்பாளரின் தலைமை அலுவலகம் அமைத்துள்ளார்.


அங்கிருந்து தனது பிரச்சார பணிகளை தினமும் செய்து வருகிறார். இன்று தாமோதரன் திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த போதாவூர், எட்டரை  கோப்பு உள்ளிட்ட கிராம பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது அவருக்கு கிராம மக்கள் ஆதரவு தெரிவித்தனர் குறிப்பாக இந்த பகுதிகளில் மல்லிகை பூ, கோழி கொண்டை, கிரேந்தி உள்பட ஏராளமான மலர் சாகுபடி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்களுக்கு இந்த பகுதியில் மல்லிகை பூ சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அதற்கு அவர் தான் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானால் நிச்சயம் இந்த பகுதியில் மல்லிகை பூ சென்ட் தொழிற்சாலை அமைத்து தருவேன். மேலும் மலர்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைக்கும் வகையில் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவேன் எனவும் வாக்குறுதி அளித்தார். 

Tags:    

Similar News