திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு தி.மு.க.வில் முக்கோணப்போட்டி
திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு தி.மு.க.வில் முக்கோணப்போட்டி ஏற்பட்டு உள்ளது.;
தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி 150 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சியாக இருந்து கடந்த 1994ஆம் ஆண்டு மாநகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்பட்டது. அந்த வகையில் திருச்சி மாநகராட்சியாக தகுதி உயர்த்தப்பட்டு 28 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்த 28 ஆண்டுகளில் திருச்சி மாநகராட்சி நான்குமுறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்திருக்கிறது.
முதல் முறையாக கடந்த 1996ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. வேட்பாளராக போட்டியிட்ட புனிதவல்லி பழனியாண்டி மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு திருச்சி மாநகராட்சியின் முதல் மேயர் மட்டுமல்ல முதல் பெண் மேயர் என்ற தகுதியுடன் வணக்கத்திற்குரிய மேயர் இருக்கையை அலங்கரித்தார். அதன் பின்னர் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் த.மாகா.வின் சாருபாலா தொண்டைமான் மேயராக மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006ஆம் ஆண்டு கவுன்சிலர்கள் மூலம் மேயரை தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது. அப்போது மீண்டும் இரண்டாவது முறையாக சாருபாலா தொண்டைமானே மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் ஜெயா நேரடியாக மேயராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆக இதுவரை நடந்த தேர்தல்கள் அனைத்திலும் திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை பெண்களே அலங்கரித்து உள்ளனர். தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் திருச்சி மேயர் பதவி பொது தொகுதியாக அறிவிக்கப்பட்டு விட்டதால் இனி முதல்முறையாக ஆண் ஒருவர் மேயர் பதவியை அலங்கரிக்கப் போகிறார். மாநகர தந்தை என அழைக்கப்படும் அந்த மரியாதைக்குரிய பதவியை ஏற்க போவது யார் என்பதுதான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாகும் .
திருச்சி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அதன் பொதுச்செயலாளர் துரைமுருகனால் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள 65 வார்டுகளில் தி.மு.க.50 வார்டுகளில் போட்டியிட உள்ளது. இதில் முதல் கட்டமாக 45 வார்டுகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். மீதி 5 வார்டுகளில் வேட்பாளர் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கூட்டணி கட்சிகளுக்கு 15 வார்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதன் விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதும் திருச்சி மாநகராட்சி பகுதி தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர். இதற்கு காரணம் திருச்சி மாநகராட்சி மேயர் பதவி கடந்த கால் நூற்றாண்டு காலமாக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு அதன்காரணமாக ஒருமுறைகூட தி.மு.க. மேயர் அந்த இருக்கையில் அமரவில்லை. நடைபெறவுள்ள தேர்தலில் அதனை மாற்றிக் காட்ட இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதுதான். எனவே ஒவ்வொரு வார்டின் வெற்றியையும் மிக கவனமாக பெற வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக உள்ளது.
திருச்சி மாநகராட்சி தேர்தலில் தி.மு.க அதிக இடங்களில்வெற்றி பெற்றால் யார் மேயர்? என்பது தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மட்டுமின்றி திருச்சி மாநகர மக்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் தேர்தல் முடிந்த பின்னர் தான் விடை கிடைக்கும் என்றாலும் தி.மு.க.வில் இப்போதே மேயர் தேர்தலுக்கான 'ரேஸ்' தொடங்கிவிட்டது என்றே கூற வேண்டும்.
மாநகராட்சி 27-வது வார்டில் போட்டியிடும் மு. அன்பழகன், 40- வது வார்டில் போட்டியிடும் கே. என் .சேகரன் ,16 வது வார்டில் போட்டியிடும் எம். மதிவாணன் இவர்களில் யாராவது ஒருவருக்கு மேயர் பதவி கிடைக்கும் என உறுதியாக அறுதியிட்டுக் கூறுகிறார்கள் தி.மு.க. தொண்டர்கள்.
அந்த வகையில் திருச்சி தி.மு.க.வில் மேயர் பதவிக்கு முக்கோண போட்டி ஏற்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். இந்த முக்கோண போட்டி நாயகர்களில் ஒருவரான மு.அன்பழகன் திருச்சி மாநகராட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் இரண்டு முறை கவுன்சிலராகவும்,இரண்டு முறை துணை மேயராகவும் பதவி வகித்து மக்களுக்கு மிகவும் தெரிந்த ஒரு முகமாக காட்சி அளிக்கிறார். திருச்சி மாநகர தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வரும் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
40 வது வார்டு தி.மு.க. வேட்பாளரான கே.என். சேகரன் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர். கட்சியில் நீண்டகால உறுப்பினர் மட்டுமல்ல ஒன்றிய செயலாளர் உள்பட பல பதவிகளையும் வகித்துள்ளார். அடுத்து 16 வது வார்டில் போட்டியிடும் மதிவாணன் திருச்சி மலைக்கோட்டை பகுதி தி.மு.க. செயலாளராக உள்ளார் .பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு மிகவும் நெருக்கமான இவர் முதல்முறையாக திருச்சி மாநகராட்சி தேர்தலை சந்திக்கிறார்.
ஆக திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை அலங்கரிக்கப் போவது யார்? ரேஸில் முதலிடம் பிடித்து சாதனை படைக்க போவது யார்? என்பது தான் இப்போது மிகப்பெரிய ஒரு கேள்வியாக உள்ளது.