திருச்சி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி துவங்கி உள்ளது.

Update: 2024-04-11 07:36 GMT

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களது பெயர் சின்னம் பொருத்தும்பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக துரைவைகோ,  அதிமுக வேட்பாளராக கருப்பையா , அமமுக வேட்பாளராக செந்தில்நாதன் , நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேஷ் ஆகியோர் மற்றும்  சுயேச்சைகள் உட்பட 35 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 15 வேட்பாளர்களது பெயர்கள் மற்றும் ஒரு நோட்டா இடம் பெற முடியும். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 35 பேர் போட்டியிடுவதால் மூன்று வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. அதாவது ஒரு வாக்கு சாவடியில் ஒரு கண்ட்ரோல் யூனிட், 3 பேலட் யூனிட் ஒரு விவிபெட் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

அதன்படி திருச்சி தொகுதியில் உள்ள 1665 வாக்கு சாவடிகளில் தலா 1665 கண்ட்ரோல் யூனிட் மற்றும் விவிபெட் எந்திரமும்,  4995 பேலட் யூனிட்களும் பயன்படுத்தப்பட உள்ளன. நோட்டாவுடன் சேர்ந்து  வாக்குப்பதிவு எந்திரத்தில் 36 பொத்தான்கள் பயன்பாட்டில் இருக்கும். மீதமுள்ள 12 பொத்தான்கள் செயல்படாமல் முடக்கப்படும்.

மூன்று மின்னணு எந்திரங்கள் வைக்கப்படும் போது எந்திரத்தில் கடைசி பட்டனாக நோட்டா இருக்கும். அதன்படி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டன. அவை அங்குள்ள பாதுகாப்பு அறைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. மேலும் கடந்த 30ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்துவதற்கான புகைப்படம் மற்றும் சின்னத்துடன் கூடிய வாக்கு சீட்டு அச்சிடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

அந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டன. அந்த வாக்குபதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும்பணி தொடங்கியது. அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாதுகாப்பு மையங்களில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் இவற்றை பொருத்தி வருகிறார்கள். இதனை திருச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரதீப் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News