திருச்சி ராணுவ அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் காய்கறி கேட்டு நூதன மோசடி

திருச்சியில் வியாபாரிகளிடம் ராணுவ அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் காய்கறி கேட்டு நூதன மோசடியில் வடமாநில கும்பல் ஈடுபட்டுள்ளது.

Update: 2021-11-30 06:12 GMT

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளிடம் வடமாநில கும்பல் ஒன்று செல்போனில் தொடர்பு கொண்டு, காய்கறிகளை ஆர்டர் கொடுத்து திருச்சியில் உள்ள ராணுவ கேண்டீனுக்கு அவற்றை கொண்டு வரும்படி கூறி உள்ளது. அதற்கு ஆன்-லைன் (யு.பி.ஐ.) மூலம் பணம் அனுப்புவதாக கூறும் வடமாநில நபர், ஆர்மி செக் ரூ.1 என்ற க்யூ ஆர் கோர்டு அனுப்பி அதை ஸ்கேன் செய்யும்படி கூறியுள்ளார்.

மேலும் வாட்ஸ் அப்- காலில் அந்த எண் ஆர்மிடிபார்ட்மெண்ட் ஆபீஸ் அக்கவுண்ட் என்று காண்பிக்கிறது. இதைநம்பி வியாபாரிகள் காய்கறிகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ராணுவ கேண்டீனுக்கு சென்றால் நாங்கள் ஆர்டர் கொடுக்கவில்லை என்று கூறி உள்ளனர். அந்த வடமாநில நபரை தொடர்பு கொண்டால், அவர், தான் அனுப்பிய க்யூ ஆர்கோர்டை ஸ்கேன் செய்யும்படியே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இதனால் பல வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்து வருவதாக வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

எனவே இதுபோன்ற மோசடி கும்பலிடம் ஏமாறாமல் இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News