திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தியவர் வெளியே சென்றது எப்படி?

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தியதாக பிடிபட்டவர் வெளியே சென்றது எப்படி? என விசாரணை நடந்து வருகிறது.

Update: 2021-10-06 06:15 GMT

துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணரிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது கும்பகோணத்தை சேர்ந்த கண்ணன், (வயது 34), சூரிய பிரகாஷ் (வயது29), ஆகியோரை சோதனையிட்டனர். அவர்கள் ஆசன வாயில் மறைத்து  வைத்து, ரூ.60 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 250 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் அதிகாரிகள் விசாரணைக்காக தனியாக அமர வைத்திருந்தனர்.

இந்த நிலையில் விமான நிலைய வளாகத்திற்குள் நுழைய வந்த ஒரு நபரை பிடித்து சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் விசாரணை நடத்தினர். அப்போது தான் அந்த நபர் தங்கம் கடத்தலில் பிடிபட்ட சூரியபிரகாஷ் என்பது தெரியவந்தது. இதையறிந்த போலீசார் உடனடியாக சூரிய பிரகாசை கைது செய்தனர். இந்நிலையில் சூரிய பிரகாஷ் விமான நிலைய முனையத்தில் இருந்து எப்போது வௌியே சென்றார்? எதற்காக சென்றார்? யாரை சந்தித்தார்? என்பது தெரியவில்லை.

மேலும் அறையில் தங்க வைக்கப்பட்டிருந்த சூரியபிரகாஷை வெளியில் அழைத்து சென்ற கறுப்பு ஆடு யார்? என்பது குறித்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளின் அடிப்படையில் சி.ஐ.எஸ்.எப். அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News