டாஸ்மாக் பணியாளர்களை பாதுகாக்க அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்

டாஸ்மாக் பணியாளர்களை பாதுகாக்க அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2021-12-12 04:45 GMT

திருச்சியில் நடந்த டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.

தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி.அலுவலர் நலச்சங்கத்தின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் இணைப்பு சங்கமான தமிழ்நாடு அரசு டாஸ்மாக் எஸ்.சி., எஸ்.டி. பணியாளர் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது.

கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலர் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் கே.பி.ஜி.திலகர், எஸ்.சி., எஸ்.டி. டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் அண்ணாதுரை, பொதுச் செயலாளர் ஆறுமுகம், திருச்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை என மாற்றி அமைக்க வேண்டும். 10 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தம் செய்திட வேண்டும். அது தாமதமாகும் பட்சத்தில் இடைக்கால தீர்வாக மேற்பார்வையாளருக்கு ரூ.30 ஆயிரம், விற்பனையாளருக்கு ரூ.25 ஆயிரம், உதவி விற்பனையாளருக்கு ரூ.20 ஆயிரம் என மாத ஊதியம் வழங்க வேண்டும்.

டாஸ்மாக் பணியாளர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்படுவதும், கொலை செய்யப் படுவதும் அதிகரித்து வருகிறது. எனவே, பணியாளர்களை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றிட வேண்டும் என்பது உள்பட 12 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News