திருச்சியில் வழிப்பறி செய்த இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
திருச்சியில் வழிப்பறி செய்த இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.;
திருச்சி வயர்லெஸ் சாலையில் கடந்த 11ஆம் தேதி நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி தர்மா என்கிற தர்மசீலன் (வயது22) ரூ 500 பணத்தை வழிப்பறி செய்து கொண்டு ஓடினார். ஏர்போர்ட் போலீசார் அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
இதேபோல பொன்மலைப்பட்டி சாலையில் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய அப்துல் நசீர் (23) கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 வழிப்பறி செய்து கொண்டு ஓடினார். இவர் மீது ஏற்கனவே பாலக்கரையில் செல்போன் திருட்டு உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன .இவரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த இருவரும் சிறையில் இருந்து வெளியே வந்தால் மீண்டும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்பதால் அவர்கள் இருவரையும் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்து ஒரு வருடம் எந்தவித விசாரணையின்றி சிறையில் அடைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் இன்று வழங்கப்பட்டது.