கோயில் நகை உருக்குவதற்கு வி.எச்.பி. செயல் தலைவர் அலோக்குமார் எதிர்ப்பு

கோயில் நகைகளை உருக்குவதற்கு விஸ்வ இந்து பரிஷத் சர்வதேச செயல்தலைவர் அலோக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.

Update: 2021-11-28 06:45 GMT

வி.எச்.பி. செயல்தலைவர் அலோக்குமார் திருச்சியில் பேட்டி அளித்தார்.

விஸ்வ இந்துபரிஷத் சர்வதேச செயல்தலைவர் அலோக்குமார் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்று திருச்சி வந்த அவர் சத்திரம் பஸ்நிலையம் அருகில் உள்ள ரவிமினிஹாலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கட்டாய மதமாற்றம் நடைபெறுவது அண்மை காலத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சர்வதேச சதி செயல் இருப்பதும்கண்டறியப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கட்டாய மதமாற்றம் அதிகரித்துள்ளது. கட்டாய மதமாற்றத்தை தடுக்க நம்நாட்டில் 11 மாநிலங்கள் சட்டம் இயற்றியுள்ளன.

இந்த தடை சட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும். இதை வலியுறுத்தும் விதமாக விஷ்வ ஹிந்து பரிஷத் கட்டாய மதமாற்ற தடை சட்டம் நாடுமுழுவதும் அமல்படுத்த வேண்டும். விஷ்வ ஹிந்து பரிஷத் மதமாற்றத் தடைச் சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டுவர வலியுறுத்துகிறது. தமிழகத்தில் மதமாற்றம் கட்டாயத்தின் பெயரிலும், பண முதலீடுகள்மூலமாகவும், மிரட்டியும் மற்றும் போலி வாக்குறுதிகள் மூலமாகவும் செய்யப்படுகிறது. மதமாற்றம் சமுதாயத்தில் இருக்கும் நல்லிணக்கத்தை குறைக்கின்றது.

மதமாற்றத் தடைச்சட்டம் தமிழ்நாட்டிலுள்ள தேச விரோதிகளை தோலுரித்துக் காட்டும், மற்றும் தேச விரோதச் செயல்கள் முற்றிலும் அழிக்கப்படும்.

விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழக அரசு கோயிலில் உள்ள காணிக்கை நகைகளை உருக்கி தங்க கட்டிகளாகச் செய்து வங்கிகளில் வைத்து வட்டி வாங்கி கோயில்களுக்கு செலவு செய்யும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கிறது. இந்த முயற்சியை கைவிடவும் வேண்டுகோள் விடுக்கிறது. பக்தர்கள் கோயிலுக்கு அளித்த நன்கொடைஅவர்களின் மத நம்பிக்கையை சார்ந்தது. இது காலம், காலமாக நடந்து வரும் சம்பிரதாயம், இதில் அரசு தலையிடுவதற்கு ஒருபோதும் உரிமை இல்லை.

கோயில்கள் மற்றும் திருமடங்கள் விஷயத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடத்தப்பட வேண்டிய நேரம் இது. கோயில்கள், மடங்கள் குறித்து வெளிப்படையான கட்டமைப்புத்தேவை. கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் கோயில் வருமானம் மட்டுமின்றி ஆன்மிக பணிகளுக்கு பங்களிக்கும் பக்தர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். மாநில அரசுகள் ஒருபோதும் கோயில்கள் மீது உரிமை கொண்டாடக்கூடாது. கோயில் விவகாரங்களில் குறைந்தபட்ச தலையீடு மட்டுமே அரசுக்கு இருக்க சட்டத்தின் வழியே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆகவேஇந்து கோயில்கள், திருமடங்களையும் இந்து சமுதாயத்திடம் ஒப்படைக்க மத்திய அரசிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை வைக்கிறது. கோயில்களில் யார்பூசாரியாக இருக்க வேண்டும் என்பது தொடங்கி சம்பிரதாய பூஜைகள் வரை உறுதிப்படுத்த வேண்டும். இந்து கோயில்களை அரசின் பிடியிலிருந்துவிடுவிக்கும் பொருட்டு நாடு தழுவிய முயற்சி மேற்கொள்ளவிருக்கிறது. இதற்கென, மத்தியக் குழு பல்வேறு இந்து மதத் தலைவர்கள் மற்றும் மடாதிபதிகளை சந்தித்துஇந்துக் கோயில்களை இந்து சமுதாயமே நடத்திடும்படி முயற்சி மேற்கொள்ள இருக்கிறது. இந்த வழிகாட்டுதல் தேடும் முயற்சியில், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மத்தியஅமைப்புக் குழு, நாடு முழுவதும் பயணம் செய்து இதற்கான ஒருமுக அமைப்பை ஏற்படுத்த தீர்மானித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் இணை பொது செயலாளர் ஸ்தாணுமாலயன், தென் பாரத அமைப்பாளர் நாகராஜன், மாநில தலைவர் குழைக்கர்தர், மாநில செயலாளர்லட்சுமண நாராயணன், மாவட்ட செயலாளர் சசிகுமார், மாவட்ட தலைவர் முருகேசன், பொருளாளர் சிவராஜ், சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News