திருச்சியில் ஜவுளிக்கடையில் சேலைகள்- பணம் திருடிய 2 சிறுவர்கள் கைது

திருச்சியில் ஜவுளிக்கடையில் சேலைகள், பணம் திருடிய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-12 12:27 GMT

காந்தி சந்தை காவல் நிலையம் (பைல் படம்).

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம்நகரை சேர்ந்தவர் வினோத் (வயது 42). இவர் அலங்கநாதபுரத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 8-ந் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் காலை மீண்டும் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 10 சேலைகள், 50 நைட்டிகள் மற்றும் ரூ.5,500 பணம் ஆகியவை திருட்டு போய் இருந்தது.

இது குறித்து வினோத் காந்திமார்க்கெட் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் 17 வயதுடைய 2 சிறுவர்கள் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து சேலைகள் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட ஜவுளிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News