திருச்சியில் மண்டை ஓடுகளை வரிசையாக அடுக்கி வைத்து விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் மண்டை ஓடுகளை வரிசையாக அடுக்கி வைத்து விவசாயிகள் 16-வது நாள் போராட்டம் நடத்துகிறார்கள்.

Update: 2021-10-27 06:12 GMT

16 -வது நாளான இன்று திருச்சியில் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளை வரிசையாக அடுக்கி வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும் அதுவரை விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், மழையில் அழிந்து வரும் 40 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரியும், உத்தர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க கோரியும்  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 46 நாட்கள் உண்ணாவிரதம் கரூர் பைபாஸ், மலர் சாலையில்  தொடங்கி நடந்து வருகிறது

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில்  முதல் நாள் சட்டை இல்லாமலும், அரசு வேஷ்டியையும் பிடுங்கி கொண்டதால் இரண்டாவது நாள் விவசாயிகள் கோவணம் கட்டியும் மூன்றாவது நாள் லாபகரமான விலை கொடுக்காமல் விவசாயிகளை அரசு பிச்சை எடுக்க விட்டு விட்டதால் பிச்சை எடுத்தும், நான்காவது நாள் லாபகரமான விலை கொடுக்காமல் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டியதால் விவசாயிகள் மண்டை ஒட்டுடனும், ஐந்தாவது நாள் விவசாயிகளை மத்திய அரசு லாபகரமான விலை தராமல் ஏமாற்றி விட்டதால் நாமம் போட்டும், ஆறாவது நாள் விவசாயிகள் உணவில்லாமல் வயலில் ஓடும் எலியை பிடித்து தின்றும் உண்ண உணவில்லாமலும் இறந்ததால் இறந்த விவசாயிகளுக்கு பாடை கட்டியும் போராட்டம் நடத்தினார்கள். 

அந்த வரிசையில் 13  வது நாள்  விவசாயிகள் தங்கள் முகங்களில் கரி பூசியும், பதினான்காவது நாளாக இரண்டு மடங்கு லாபம் தரும் விலை தந்து விவசாயிகள் நெஞ்சில் நிறைவை ஏற்படுத்துகிறேன் என்று கூறிய மோடி கடந்த ஏழு வருடங்களாக இரண்டு மடங்கு லாபகரமான விலை தராமல் விவசாயிகளை மோடி ஏமாற்றி விவசாயிகள் நெஞ்சில் கல்லை தூக்கி போட்டு விட்டார் என்பதற்காக நெஞ்சில்  கல்லுடனும், பதினைந்தாம் நாள் மோடி விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்காமல் நெஞ்சில் கல்லை போட்டு விட்டதால் விவசாயிகள் இறந்து விட்டனர் என கருதி அவர்களுக்காக சங்கு ஊதி மணி அடித்தும் போராட்டம் நடத்தினர்.

பதினாறாவது நாளான இன்று   விவசாயிகள் நெஞ்சில் கல்லை போட்டு விட்டதால் இறந்த விவசாயிகளின் எலும்புகளுக்கு பால் தெளித்து கரும காரியம் செய்யும் வகையில் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளை வரிசையாக அடுக்கி வைத்தும் போராட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News