திருச்சி வழியாக ஷீரடிக்கு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரெயில் இயக்கம்

திருச்சி வழியாக ஷீரடிக்கு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-12-15 14:30 GMT

இந்தியன் ரெயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி/ சிறப்பு பாரத தரிசன சுற்றுலா ரெயிலை இயக்க ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதன்படி வருகிற 24-ந்தேதி மதுரையில் இருந்து 7 நாட்கள் பயணமாக "ஷீரடி-பண்டரிபுரம் சனிசிங்னாப்பூர் சிறப்பு ரெயில்" இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக ஷீரடி செல்கிறது. அங்கு சாய் பாபா, பண்டரிபுரம் பாண்டுரங்கன், மந்த்ராலயம் ராகவேந்திரர், சனிசிங்கனாப்பூர் சுயம்பு சனீஸ்வரரையும் தரிசிக்கலாம். நாட்கள் உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து, பயண காப்பீடு, ரெயில் பயண கட்டணம் உள்பட தலா ஒருவருக்கு ரூ.7 ஆயிரத்து 60 ஆகும்.

இதேபோல் அடுத்த மாதம் ஜனவரி 22-ந்தேதி மதுரையில் இருந்து சக்திபீடம் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து 13 நாட்கள் பயணமாக திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், ஜோலார் பேட்டை, சென்னை சென்ட்ரல் வழியாக சென்று கொல்கத்தா உள்ளூர் சுற்றிப்பார்த்தல், காளிதேவி, காமாக்யாதேவி, காசிவிசாலாட்சி, மங்களகவுரி (கயா), அலோபிதேவி (அல காபாத்), பிமாலதேவி (பூரி) போன்ற ஐந்து சக்திபீடங்களையும் மேலும் அங்குள்ள ஆலயங்களையும் தரிசிக்கலாம், முக்கிய நிகழ்வாக தை அமாவாசை அன்று கயா சென்று முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து விஷ்ணு பாதம் மன நிறைவுடன் தரிசிக்கலாம். 13 நாட்கள் பயணத்திற்கு உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து, பயண காப்பீடு, ரெயில் பயண கட்டணம் உள்பட தலா ஒருவருக்கு ரூ.12 ஆயிரத்து 285 ஆகும். இந்த பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய 8287931974 என்ற அலைபேசி எண்ணிலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய www.irctctourism.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News