திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் வெளிநாட்டு கைதிகளுக்குள் மோதல்

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் வெளிநாட்டு கைதிகளுக்குள் அடிதடி தகராறு ஏற்பட்டது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-02-14 13:04 GMT

திருச்சி மத்திய சிறை வளாகத்தில்  வளாகத்தில் வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை, நைஜீரியா ஆகிய நாடுகளை சேந்தவர்கள் போதைப்பொருள் கடத்தல், போலி பாஸ்போர்ட், ஆன்லைன் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி இங்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள வெளிநாட்டினருக்கு சமைத்து உண்ணவும், செல்போன் பயன்படுத்தவும், லேப்டாப் உபயோகப்படுத்தவும் சிறப்பு அனுமதி உண்டு. அவர்கள் குடும்பத்தினரும் இங்கு வந்து பார்த்து செல்லலாம். இந்த சிறப்பு முகாமில் உள்ள ஒரு அறையில் 2 நைஜீரியன்கள் ஐவரிகோஸ்ட்டை சேர்ந்த டேவிட் என்பவரும் தங்கியிருந்தனர்.

இவர்களுக்குள் அறையை பங்கிட்டுக் கொள்வதில் ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த அறையில் இருந்த டேவிட், தனது உறவினர்களுடன் பேசுவதற்காக நைஜீரியனிடம் செல்போனை கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றியதால் கைகலப்பாக மாறி உள்ளது. இதில் இருவரும் ஒருவரையொருவர் மாறி, மாறி கைகளால் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இந்த கைகலப்பில் ஐவரிகோஸ்ட் டேவிட் நைஜீரியன் நிக்கிபிலிப் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறை வார்டன்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மத்திய சிறை போலீசார் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News